வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்த சிறப்பு முகாம்: 6 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 36,886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன


வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்த சிறப்பு முகாம்: 6 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 36,886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன
x
தினத்தந்தி 14 Dec 2020 3:16 AM GMT (Updated: 14 Dec 2020 3:16 AM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நடந்த வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்த சிறப்பு முகாமில் இதுவரை 36,886 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்று கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்த முகாம் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றது. இதில் 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் வந்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கினர்.

இதனிடையே வேப்பனப்பள்ளி தொகுதிக்குட்பட்ட பீமாண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் குந்தாரப்பள்ளி அரசு உயர் நிலைப்பள்ளியில் வாக்காளர் பட்டியல் சுருக்க, திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. இதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெயர் சேர்த்தல் பணிகள்

அப்போது கலெக்டர் கூறுகையில், 1.1.2021-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க, திருத்த பணிகள் இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுபடி நடைபெற்று வருகிறது. இந்த பணி நாளை (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கிறது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளும் பணிகள் நடைபெறுகிறது. அதன்படி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை 36 ஆயிரத்து 886 மனுக்கள் பெறப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story