வியாசர்பாடி பகுதியில் தலை, மார்பில் படுகாயங்களுடன் வாலிபர் பிணம்; கொலையா? போலீஸ் விசாரணை


ஆரோக்கியதாஸ்
x
ஆரோக்கியதாஸ்
தினத்தந்தி 31 Dec 2020 11:00 PM GMT (Updated: 31 Dec 2020 11:00 PM GMT)

வியாசர்பாடியில், தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயத்துடன் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாலிபர் பிணம்
சென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 33). இவர், செங்குன்றத்தில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு சாஸ்திரி நகர் பகுதியில் சாலையோரம் தலை மற்றும் மார்பில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், விரைந்து சென்று ஆரோக்கியதாசை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆரோக்கியதாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், அவரது தலை மற்றும் மார்பு பகுதியில் இரும்பு கம்பியால் பலமாக குத்திய காயம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கொலையா?
இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியதாசை யாராவது கம்பியால் குத்திக்கொலை செய்தார்களா? இல்லை அவர் கீழே விழுந்து தலை மற்றும் மார்பில் ஏற்பட்ட காயத்தால் இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகிறார்.

எனினும் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவம்
செங்குன்றத்தை அடுத்த ஆரிக்கம்பேடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு (50). பால் வியாபாரியான இவர், பம்மதுகுளம் எல்லம்மன் பேட்டை வேலவன் நகர் அருகே உள்ள குளத்தில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாபுவை யாரேனும் அடித்தக்கொலை செய்துவிட்டு, உடலை குளத்தில் வீசினார்களா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story