பல்லடம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி பெயிண்டர் கொலை


பல்லடம் அருகே  இரும்பு கம்பியால் தாக்கி பெயிண்டர் கொலை
x
தினத்தந்தி 28 Feb 2021 4:06 PM GMT (Updated: 28 Feb 2021 4:06 PM GMT)

பல்லடம் அருகே இரும்பு கம்பியால் தாக்கி பெயிண்டர் கொலை

பல்லடம்:-
குடும்பத்தினரை தவறாக பேசியதால், இரும்பு கம்பியால் தாக்கி பெயிண்டர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக  நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள். 
இந்த கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெயிண்டர் கொலை 
 விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் மங்கலேஸ்வரன் (வயது 43). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னூர் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருடன் சிவகாசியை சேர்ந்த அய்யனார் (41) என்பவரும் வேலை செய்து வருகிறார். 
இந்த நிலையில், நேற்று முன்தினம் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது. சம்பளத்தை வாங்கிய மங்கலேஸ்வரன், அய்யனார் மற்றும் தொழிலாளர்கள் சிலர்  பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள, டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர். அப்போது மங்கலேஸ்வரனுக்கும்,  அய்யனாருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி, மீண்டும் நூற்பாலைக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு இவர்கள் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 
கொலை
இதையடுத்து இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அய்யனார் குடும்பத்தை மங்கலேஸ்வரன்  தவறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அய்யனார் அருகே இருந்த இரும்பு கம்பியை எடுத்து, மங்கலேஸ்வரன் தலை, உள்ளிட்ட இடங்களில் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அய்யனார் அங்கிருந்து தலைமறைவானார். இந்த நிலையில் நேற்று காலை அங்குள்ள அறை முன்பு  ரத்தவெள்ளத்தில் மங்கலேஸ்வரன் பிணமாக கிடப்பதை மற்ற தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 
 இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே  சம்பவ இடத்திற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் மற்றும் போலீசார் வந்து மங்கலேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அய்யனாரை தேடி வருகிறார்கள்.  கொலையான  மங்கலேஸ்வரனுக்கு சந்திரகலா என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 

Next Story