திருமுருகன் பூண்டி திருமுருகநாத கோவிலில் தெப்பத்திருவிழா


திருமுருகன் பூண்டி திருமுருகநாத கோவிலில் தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 28 Feb 2021 4:46 PM GMT (Updated: 28 Feb 2021 4:46 PM GMT)

திருமுருகன் பூண்டி திருமுருகநாத கோவிலில் தெப்பத்திருவிழா

அனுப்பர்பாளையம், மார்ச். 1-
திருமுருகன் பூண்டி திருமுருகநாத கோவிலில் தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமுருகநாதசுவாமி கோவில்
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவிலில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
  இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை தெப்பத்திருவிழா கோவில் வளாகத்தில் உள்ள மகாமக குளத்தில் நடைபெற்றது. கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின்பு ஊர்வலமாக வந்த சோமாஸ்கந்தர்-அம்பாளுக்கு மகாமக குளக்கரையோரம் உள்ள விநாயகர் கோவிலில் பூஜைகள் நடத்தப்பட்டது. இதன் பின்பு நடைபெற்ற தெப்பத்திருவிழாவில் சோமாஸ்கந்தர்-அம்பாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் 11 முறை குளத்தை சுற்றி வலம் வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கைகூப்பி வழிபட்டனர்.
அகல் விளக்கு
விழாவையொட்டி குளத்தை சுற்றி அகல் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தது. முன்னதாக மகாமக குளத்தில் ஓம் பசுமை அங்காடி நிறுவனம் சார்பில் நிர்வாக இயக்குனர் உமாசங்கர்-சாந்தி தம்பதி தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை திருமுருகநாதசுவாமி கோவில் செயல் அலுவலர் கங்காதரன் தலைமையில் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

Next Story