சத்தி அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று நடக்கிறது


சத்தி அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 29 March 2021 9:47 PM GMT (Updated: 29 March 2021 9:47 PM GMT)

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
குண்டம் விழா
சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.
பண்ணாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பூசாரிக்கு மட்டும் அனுமதி
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு குண்டம் திருவிழா கட்டுப்பாடுகளுடன் நடத்த தீ்ர்மானிக்கப்பட்டது. பூசாரி மட்டுமே குண்டம் இறங்க மாவட்ட நிர்வாகமும், இந்துசமய அறநிலையத் துறையும் முடிவு செய்தது.
இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. பூசாரிகள் மட்டுமே குண்டத்தில் இறங்கும் வகையிலும், பக்தர்கள் அப்பகுதிக்கு செல்லாத வகையிலும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் அம்மனை தரிசிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்தில் காலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்களுக்கான வசதிகள்
மேலும் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் வெயிலில் நிற்பதை தவிர்க்க கோவில் முன்பு தகர ஷீட்டால் ஆன செட் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு பக்தர்கள் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
குண்டத்துக்கு தேவையான வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை உபயதாரர்கள் கொண்டு வந்து கோவில் வளாகத்தில் குவித்து வைத்துள்ளனர். திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Next Story