மஞ்சு விரட்டில் மாடு முட்டி முதியவர் பலி


மஞ்சு விரட்டில் மாடு முட்டி முதியவர் பலி
x
தினத்தந்தி 31 March 2021 4:13 PM GMT (Updated: 31 March 2021 4:13 PM GMT)

மேலூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டி முதியவர் ஒருவர் பலியானார்.

மேலூர்,ஏப்
மேலூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் மாடு முட்டி முதியவர் ஒருவர் பலியானார்.
மஞ்சு விரட்டு
மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டியில் மந்தைகருப்புச்சாமி கோவில் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் காளை மாடுகள் கொண்டுவரப்பட்டன. அந்த மாடுகள் அனைத்தும் அங்குள்ள வயல் வெளியில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்பட்டன. சீறிப் பாய்ந்து வந்த காளை மாடுகளை வாலிபர்கள் பிடிக்க முயன்றனர். அவர்களை மாடுகள் முட்டித் தள்ளி பந்தாடின.
பாய்ந்து வந்த காளைக்கு பயந்து சில வாலிபர்கள் தரையில் படுத்து சாமர்த்தியமாக தப்பினர். மாடுகள் முட்டியதில் சுமார் 10 பேர் சிறிய காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று சென்றனர். 
6 பேர் மீது வழக்கு
நாயத்தான்பட்டியை சேர்ந்த பாண்டியன் (வயது 70) என்பவர் மஞ்சு விரட்டுக்கு தனது காளையை கொண்டு வந்திருந்தார்.
அந்த காளை கூட்டத்தினரை பார்த்து மிரண்டு ஓடி பாண்டியனையே முட்டி தள்ளியது. இதில் படுகாயம் அடைந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் மேலூருக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த நிலையில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்தியதாக விழா கமிட்டியினர் 6 பேர் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Next Story