ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை கிலோவுக்கு ரூ.7.85 குறைவு


ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை கிலோவுக்கு ரூ.7.85 குறைவு
x
தினத்தந்தி 27 April 2021 6:58 PM GMT (Updated: 27 April 2021 7:45 PM GMT)

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை கிலோவுக்கு ரூ.7.85 விலை குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாராந்திர கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. இதில் ஆனைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொப்பரை உற்பத்தி செய்து விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இதன்படி நேற்று வாராந்திர கொப்பரை ஏலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கண்காணிப்பாளர் மணிவாசகம் முன்னிலையில் விறுவிறுப்பாக நடந்தது. இதில், ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த 138  விவசாயிகள் மொத்தம் 778 கொப்பரை தேங்காய் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். 8 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

விவசாயிகளின் கொப்பரைகள் 2 தரங்களாக பிரிக்கப்பட்டது. இதில், 420 மூட்டைகள் முதல் தர கொப்பரைகள் ஆகும். இவை கிலோ ரூ.110 முதல் ரூ.120.55 வரை ஏலம் போனது. 358 மூட்டைகள் 2-ம் தர கொப்பரை மூட்டைகள் கிலோ ரூ.74 முதல் ரூ.105 வரை ஏலம் போனது.

 கடந்த வாரத்தை ஒப்பிடும்போது நேற்று நடந்த ஏலத்திற்கு 4 கொப்பரை மூட்டைகள் வரத்து குறைவாக இருந்தது. முதல் தர கொப்பரை கடந்த வாரத்தைவிட கிலோவுக்கு ரூ.7.85 குறைந்து காணப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொரோனா ஊரடங்கால் பல இன்னல்களை சந்தித்து வருகிறோம்.  இந்த நிலையில், கொப்பரை கொள்முதல் விலை கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.7.85 குறைந்தது விவசாயிகள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது. 

தொடர்ந்து கொப்பரை விலை குறைந்து வருவதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story