ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்


ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 April 2021 11:46 PM GMT (Updated: 27 April 2021 11:46 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
தடுப்பு நடவடிக்கைகள்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக பட்டியல் வெளியிடப்பட்டது.
இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரம் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு லேசான தொற்றின் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கும் உரிய சிகிச்சைகளை வழங்கி கண்காணிக்க உத்தரவிட்டு உள்ள கலெக்டர் அதுபோன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு செய்யப்பட்டு உள்ள வசதிகளையும் பார்வையிட்டு வருகிறார்.
படுக்கை வசதிகள்
இதுபோல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பினால் யாருக்கும் உயிரிழப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தேவையான படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இரவு நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் சிறப்பாக செய்து உள்ளனர். தினசரி அனைத்து பகுதிகளிலும் போலீசார் மற்றும் ஊர்க்காவல்படையினர் ஊரடங்கு பணிகளை செய்து வருகிறார்கள். இதனால் மிக அத்தியாவசியமற்ற போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டு இருக்கிறது.
அதே நேரம் திடீர் என்று ஏற்படும் கொரோனா மரணங்கள் மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. பெருந்துறை மருத்துவக்கல்லூரி பெண் டாக்டர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இள வயதினர், முதியவர்கள் என்று பாகுபாடு இன்றி 2-ம் அலை கொரோனா உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
கட்டுப்பாடு அவசியம்
எனவே பொதுமக்கள் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டியது அவசியம். எனக்கு கொரோனா வரக்கூடாது. நான் யாருக்கும் கொரோனாவை பரப்ப மாட்டேன் என்று அவரவர் இந்த விஷயத்தில் சுயநலத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியம். தேவையின்றி பொது இடங்களில் சுற்றுவது. கூட்ட நெரிசலான பகுதிகளுக்கு செல்வது. முகக்கவசம் அணிய மறுப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்யாமல் இருப்பது என்ற அலட்சியமான நடைமுறைகளை விட்டு விட வேண்டியது அவசியமாகும்.
முகக்கவசம் அணிவது பலருக்கும் மிகவும் கஷ்டமாக இருக்கும். மூச்சுவிட சிரமமாகவும் இருக்கும். ஆனால் சிரமம் பார்க்காமல் போட்டு பழகிவிட்டால் சிரமம் தெரியாது. ஆனால் சிரமம் என்று முகக்கவசம் அணிவதை தவிர்த்தால், ஒரு வேளை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சுவாசத்துக்காக மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டால் அது எப்படிப்பட்ட சிரமமாக இருக்கும் என்பதை உணர்ந்து பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story