கடும் கட்டுப்பாடுகள் காரணமாக 75 சதவீத டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர் சென்று விட்டனர்


கடும் கட்டுப்பாடுகள் காரணமாக 75 சதவீத டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர் சென்று விட்டனர்
x
தினத்தந்தி 28 April 2021 1:55 PM GMT (Updated: 28 April 2021 1:55 PM GMT)

கடும் கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் இருந்து 75 சதவீத டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டதாக டாக்சி டிரைவர்கள் சங்க தலைவர் கூறியுள்ளார்.

மும்பை, 

மராட்டியத்தில் கொரோனா நோய் பரவல் சங்கிலியை உடைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் நோய் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிப்பது குறித்தும் மாநில அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்தநிலையில் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

எனவே போதிய வருமானம் இல்லாததால் மும்பையை சேர்ந்த டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். தற்போது குறைந்த அளவில் தான் டாக்சிகள் சாலைகளில் ஓடி வருகின்றன.

இதுகுறித்து டாக்சி டிரைவர்கள் சங்க தலைவர் ஏ.எல்.குவாட்ரோஸ் கூறியதாவது:-

ஊரடங்கு அச்சம், போதிய வருமானம் இல்லாத காரணத்தால் 75 சதவீத டாக்சி டிரைவர்கள் சொந்த கிராமங்களுக்கு சென்றுவிட்டனர். தற்போது 5 ஆயிரம் டாக்சிகள் தான் ஓடுகின்றன. அவை பெரும்பாலும் விமானநிலையம், ரெயில்நிலையங்கள் வெளியில் தான் இயக்கப்படுகின்றன. எனினும் போதிய வருமானம் இல்லை. பயணிகள் அதிகம் வருவதில்லை. டாக்சியில் 2 பயணிகள் மட்டுமே செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இருப்பதாலும் சவாரி கிடைப்பதில்லை. கட்டுப்பாடுகள் காரணமாக அரசு, தனியார் அலுவலகங்கள், அத்தியாவசிய தேவையில்லாத கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சுமார் 60 சதவீத பயணிகள் தான் உள்ளனர். தற்போது சவாரி கிடைக்க டிரைவர்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story