கால அவகாசம் அளிக்காமல் மதுக்கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் அதிர்ச்சி


கால அவகாசம் அளிக்காமல் மதுக்கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 28 April 2021 2:55 PM GMT (Updated: 28 April 2021 2:55 PM GMT)

புதுவையில் கால அவகாசம் அளிக்காமல் மதுக் கடைகள் மூடப்பட்டதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி, 

புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் மதுக்கடைகளும் நாள்தோறும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று முன் தினம் பிற்பகல் 2 மணி வரை மதுக்கடைகள் செயல்பட்டன. இத்தகைய சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு கலால் துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் உள்ள சாராயம் உள்ளிட்ட அனைத்து விதமான மதுக் கடைகளும் வருகிற 30-ந் தேதி நள்ளிரவு வரை மூடப்பட வேண்டும் என்று கலால்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் புதுவை மாநிலத்தை சேர்ந்த மது பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு நாள் கூட அவகாசம் அளிக்கப்படாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே தங்களால் முன்கூட்டியே தேவையான மது வகைகளை வாங்கி வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மதுபிரியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மதுபோதைக்கு அடிமையாகியவர்கள் எல்லையில் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே மதுக்கடைகள் மூடப்பட்டதால் அங்கு திருட்டு நடக்காமல் இருக்க அனைத்து மதுக்கடை களும் பூட்டி சீல் வைக்கப் பட்டன.

Next Story