போலீஸ் போல நடித்து டிரைவரிடம் பணம் பறிப்பு


போலீஸ் போல நடித்து டிரைவரிடம் பணம் பறிப்பு
x
தினத்தந்தி 28 April 2021 3:38 PM GMT (Updated: 28 April 2021 3:38 PM GMT)

கொடைரோடு அருகே போலீஸ் போல நடித்து டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கொடைரோடு:

போலீஸ் சோதனைச்சாவடி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து, கேரள மாநிலத்துக்கு அட்டைபெட்டிகளை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனை, சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த சித்திக் (வயது 30) என்பவர் ஓட்டினார்.

கடந்த 23-ந்தேதி பகலில், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள பள்ளப்பட்டி பிரிவு சோதனைச்சாவடி அருகே வேன் வந்தது. அப்போது, அந்த சோதனைச்சாவடியில் காக்கி பேண்டு மற்றும் கலர் சட்டை அணிந்திருந்த 30 வயதுடைய வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

அந்த வேனை வழிமறித்து அவர் நிறுத்தினார். தன்னை போலீஸ்காரர் என்று கூறிய அவர், சித்திக்கிடம் விசாரணை நடத்தினார். குடிபோதையில் இருக்கிறீர்களா?, வேனுக்கான உரிய ஆவணங்கள் உள்ளதா? என்று விசாரித்தார்.

 பணம் பறிப்பு

ஒரு கட்டத்தில் அவர், ரூ.5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே வேனை அங்கிருந்து விடுவிக்க முடியும் என்று கூறி மிரட்டினார். சித்திக்கிடம் பணம் இல்லை. இதனால் ஆன்லைன் மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து அந்த நபரின் வங்கி கணக்குக்கு ரூ.5 ஆயிரத்தை சித்திக் பணபரிவர்த்தனை செய்தார்.
 
அதன்பிறகு சித்திக் வேனுடன் அங்கிருந்து புறப்பட்டார். இதற்கிடையே நடந்த சம்பவத்தை சித்திக் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்து விட்டார். இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் வீடியோ ஆதாரத்துடன் சித்திக் புகார் அளித்தார்.
 
கைது-விசாரணை

இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க, அம்மையநாயக்கனூர் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சித்திக்கிடம் பணம் பறித்தது போலீஸ்காரர் இல்லை என்று தெரியவந்தது. மேலும் கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டியை அடுத்த கந்தப்பக்கோட்டையை சேர்ந்த தவமணி (வயது 29) என்று தெரியவந்தது.

இவர் தான், தன்னை போலீஸ் என்று கூறி சித்திக்கிடம் பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தவமணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான தவமணி போலீஸ்-நண்பர்கள் குழுவில் இருந்தார். 

அப்போது போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது அந்த குழுவை தடை செய்து விட்டதால், தவமணி வேலையில்லாமல் வீட்டில் இருந்தார்.

இதனால் போலீஸ் போல நடித்து சித்திக்கிடம் பணத்தை பறித்துள்ளார். இவர் வேறு சில டிரைவர்களிடமும், தன்னை போலீஸ் என்று கூறி பணத்தை பறித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story