வீட்டின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் பொருட்கள் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து ரூ 2 லட்சம் பொருட்கள் திருட்டு
x
தினத்தந்தி 28 April 2021 5:33 PM GMT (Updated: 28 April 2021 5:33 PM GMT)

சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பொருட்கள் திருடப்பட்டன. தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

கோவை

சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பொருட்கள் திருடப்பட்டன. தொடரும் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

வீட்டின் பூட்டு உடைப்பு 

கோவை சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ் காலனியை சேர்ந்தவர் விஸ்வ நாதன் (வயது 65), தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தன்னுடைய மனைவி புஷ்பலதாவுடன் வீட்டை பூட்டிவிட்டு வடவள்ளியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றார். 

பின்னர் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டிற்குள் சென்றபோது பூஜை அறை மற்றும் பீரோவில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. 

ரூ.2 லட்சம் பொருட்கள் 

அதற்குள் இருந்த ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், பீரோவில் இருந்த 7 பட்டுப்புடவைகள், 1¼ பவுன் நகை ஆகியவை திருடு போய் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இது குறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விசாரணை நடத்தினார்கள். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர் சம்பவங்கள் 

சிங்காநல்லூரில் கடந்த ஒரே வாரத்தில் தனியார் பல்பொருள் அங்காடியில் ரூ.13.84 லட்சம், மின்வாரிய ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கம் திருட்டு, மோட்டார் சைக்கிள் ஷோரூமில் ரூ.12 லட்சம் திருட்டு என தொடர்ந்து 4-வது திருட்டு சம்பவம் இதுவாகும். 

சிங்காநல்லூரில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story