ஊட்டியில் சுதந்திர போராட்ட தியாகி மரணம்


ஊட்டியில் சுதந்திர போராட்ட தியாகி மரணம்
x
தினத்தந்தி 28 April 2021 7:05 PM GMT (Updated: 28 April 2021 7:16 PM GMT)

ஊட்டியில் சுதந்திர போராட்ட தியாகி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு கலெக்டர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நஞ்சநாடு கிராமத்தை சேர்ந்தவர் ஹள்ளி கவுடர். கடந்த 1929-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ந் தேதி பிறந்த இவர், தனது ஆரம்ப கல்வியை அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்தார். 

பின்னர் வாலிப வயதில் சுதந்திர போராட்டத்தில்  பங்கேற்றார். 1947-ம் ஆண்டு ஊட்டியில் நடந்த சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 2 மாதங்கள் மைசூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இதனால் ஆண்டுதோறும் சுதந்திர தின நாளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கவுரவிக்கப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் ஹள்ளி கவுடர் நேற்று வயது முதிர்வின் காரணமாக மரணம் அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நஞ்சநாடு கிராமத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

தொடர்ந்து உறவினர்கள் சமூக இடைவெளி விட்டு அஞ்சலி செலுத்திய பிறகு படுகர் சமுதாய முறைப்படி அவரது உடல் அங்குள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது.

ஹள்ளி கவுடருக்கு 92 வயது ஆகும். அவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தின் கடைசி சுதந்திர போராட்ட தியாகி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story