நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு டேங்கர் லாரி மூலம் 8 டன் ஆக்சிஜன் வந்தது


நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு டேங்கர் லாரி மூலம் 8 டன் ஆக்சிஜன் வந்தது
x
தினத்தந்தி 28 April 2021 7:20 PM GMT (Updated: 28 April 2021 7:20 PM GMT)

நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு டேங்கர் லாரி மூலம் 8 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.

நெல்லை, ஏப்:
நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு 2 டேங்கர் லாரிகள் மூலம் 8 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது.

ஆக்சிஜன் பற்றாக்குறை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது கட்ட அலை தாக்கம் அதிகரித்து உள்ளது. இதில் முதியோர் மற்றும் பக்க விளைவுகள் உள்ளவர்கள் உடல் நிலை மிகவும் மோசம் அடையும் சூழ்நிலையில், செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. அதாவது பிராண வாயு எனப்படும் ஆக்சிஜன் சுவாசக்குழாய் வழியாக வழங்கப்படுகிறது.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், அவர்களில் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படுவதால் ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது. இதையொட்டி இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

8 டன் வருகை

இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் 32 லட்சம் லிட்டர் வரை ஆக்சிஜனை சேமித்து வைக்கும் வகையில் 2 மிகப்பெரிய சேமிப்பு கலன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சேமிப்பு கலனில் வாரத்துக்கு 2 முறை ஆக்சிஜன் கொண்டு வந்து நிரப்பப்பட்டு வருகிறது. நேற்று 2 டேங்கர் லாரிகள் மூலம் 8 டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. அது சேமிப்பு கலனில் குழாய் மூலம் நிரப்பட்டது.
இதுகுறித்து மருத்துவ துறை அதிகாரிகள் கூறுகையில், ’’ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியை பொறுத்தவரை எப்போதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது கிடையாது. தற்போது இருக்கும் சூழ்நிலையிலும் தொடர்ந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனால் நோயாளிகள் எந்தவித அச்சமும் படத்தேவையில்லை’’ என்றனர்.

Next Story