திண்டுக்கல்லில் பூ மார்க்கெட் மீண்டும் திறப்பு
திண்டுக்கல்லில் பூ மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த கடந்த 10-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் பூ மார்க்கெட் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தற்காலிகமாக பூ மார்க்கெட் செயல்பட்டது. இவ்வாறு பூ மார்க்கெட் செயல்படுவதால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆட்சேபனை தெரிவித்தனர். அதனால் அங்கு பூ மார்க்கெட் செயல்படவில்லை. இந்நிலையில் அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்தியதால் நேற்று முதல் அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் மீண்டும் செயல்பட தொடங்கியது. இருப்பினும் விவசாயிகள் அதிக அளவில் பூக்களை விற்பனைக்கு கொண்டு வரவில்லை. இது மல்லிகைப்பூ சீசன் காலம். இதையொட்டி நாள்தோறும் சுமார் 2 டன் மல்லிகை விற்பனைக்கு வருவது வழக்கம். ஆனால் நேற்று சுமார் 500 கிலோ மல்லிகை தான் விற்பனைக்கு வந்தது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். மற்ற பூக்களின் வரத்தும் குறைவாகவே இருந்தது. மார்க்கெட்டில் (விலை கிலோவில்) மல்லிகை ரூ.250 முதல் ரூ.300 வரையிலும், முல்லை ரூ.60 முதல் ரூ.100 வரையிலும், அரளி ரூ.50, செண்டுமல்லி ரூ.25, கோழிக்கொண்டை ரூ.40, சம்பங்கி ரூ.7-க்கும் விற்பனை ஆனது.
Related Tags :
Next Story