கம்பத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம்; பொதுமக்கள் குற்றச்சாட்டு
கம்பத்தில் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கம்பம்:
கம்பத்தில் 3 மகளிர் ரேஷன் கடை உள்பட 21 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளுக்கு உட்பட்டு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்தநிலையில் தற்போது ரேஷன் கடைகளில் நடப்பு மாதத்திற்கான அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கம்பத்தில் வினியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி பயன்படுத்தவே முடியாத நிலையில் பழுப்பு கலந்த நிறத்திலும், சிறு கற்கள் கலந்து தரமற்றதாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து கம்பத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், தற்போது ஊரடங்கால் வருவாய் இழந்துள்ள சூழலில் பெரும்பாலும் ரேஷன் அரிசி தான் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசியில் சிறு கற்கள் மற்றும் குருணை, குப்பைகளுடன் தரமற்றதாக உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் வழங்குவதில்லை. எனவே இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரமான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story