மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு மேலணை வழியாக காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்தது


மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் திருச்சி முக்கொம்
x
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் திருச்சி முக்கொம்
தினத்தந்தி 15 Jun 2021 7:36 PM GMT (Updated: 15 Jun 2021 7:36 PM GMT)

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு மேலணை வழியாக காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்தது.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர்
முக்கொம்பு மேலணை வழியாக காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்தது
ஜீயபுரம்,
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு மேலணை வழியாக காவிரி ஆற்றில் சீறிப்பாய்ந்தது.

முக்கொம்பு மேலணை

காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்2கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடிசெய்ய உள்ளனர். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த 12-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். 

மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் சேலம், நாமக்கல், கரூர் வழியாக திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாய்த்தலை பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வந்தது. தொடர்ந்து காவல்கார பாளையம், சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை, காவிரி ஆற்றின் வழியாக முக்கொம்பு மேலணைக்கு நேற்று அதிகாலை 2.30 மணிய அளவில் வந்தடைந்தது. 

தண்ணீர் திறப்பு

பின்னர் அதிகாலை 3 மணி அளவில் முக்கொம்பு மேலணை பகுதியில் உள்ள 41 மதகுகளின் வழியாக தண்ணீர் திருச்சி நோக்கி திறந்து விடப்பட்டது. நேற்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்து காவிரி தாயை வணங்கினார்கள். 

 முக்கொம்பு காவிரி ஆற்றின் வழியாக நேற்று காலை 1,800 கன அடி குறைந்தளவே தண்ணீர் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. நேரம் செல்லச்செல்ல திறக்கப்பட்ட தண்ணீர் அளவு அதிகரிக்க தொடங்கியது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 7 ஆயிரம் கன அடி தண்ணீர் மேலணையில் இருந்து திறக்கப்பட்டது.

விவசாயிகள் மரியாதை

நேற்று காலை விவசாய சங்க செயலாளர் அயிலை சிவசூரியன் மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த காவிரி தாய் சிலைக்கு மாலை அணிவித்தனர்.  அதேபோல கரிகாலன் சிலைக்கும், கொள்ளிடம் பகுதியில் உள்ள கொள்ளிட அணையை கட்டிய சர் ஆர்தர் காட்டன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

 பின்னர் முக்கொம்பு மேலணையில் படையலிட்டு அதில் நெல் மற்றும் மலர்களை வைத்து இயற்கை அன்னையை வழிபட்டு, பின்னர் மேலணை வழியாக சீறிப்பாய்ந்த காவிரி தாய்க்கு நெல்மணிகளை தூவியும், மலர்களை தூவியும் வணங்கி வரவேற்றனர். 

கல்லணை

முக்கொம்பு மேலணை வழியாக சீறிப்பாய்ந்த தண்ணீரானது திருச்சி மாநகர் ஸ்ரீரங்கம் வழியாக சென்று நேற்று நள்ளிரவு கல்லணையை வந்தடைந்தது. கல்லணையில் இருந்து இன்று (புதன்கிழமை) குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Next Story