தற்காலிக சுகாதார ஊழியர்கள் போராட்டம்


தற்காலிக சுகாதார ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 10 July 2021 10:46 PM GMT (Updated: 10 July 2021 10:46 PM GMT)

ஊட்டியில் சம்பளம் வழங்காததால் ஒப்பந்ததாரரை சிறைபிடித்து தற்காலிக சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி

ஊட்டியில் சம்பளம் வழங்காததால் ஒப்பந்ததாரரை சிறைபிடித்து தற்காலிக சுகாதார ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பளம் இல்லை

ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த யாருக்கேனும் அறிகுறிகள் உள்ளதா, தடுப்பூசி போட்டு உள்ளனரா என்று வீடு, வீடாக கணக்கெடுக்க எஸ்.எஸ்.எல்.சி. முதல் பட்டப்படிப்பு வரை முடித்த மொத்தம் 250 பேர் தற்காலிக சுகாதார ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு அடையாள அட்டை, தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சி மீட்டர் வழங்கப்பட்டது. கடந்த மாதம் 9-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை என ஒரு மாதம் பணிபுரிந்தனர். ஆனால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

போராட்டம்

இந்தநிலையில் நேற்று ஊட்டி நகராட்சி அலுவலகத்துக்கு தற்காலிக சுகாதார ஊழியர்கள் வந்தனர். பின்னர் ஒப்பந்ததாரரிடம் சம்பளம் இன்னும் வழங்கவில்லை. எப்போது வழங்கப்படும் என்று அதிகாரிகளிடம் கேட்டனர். 

அதற்கு அதிகாரிகள் சரிவர பதில் அளிக்காததால், ஒப்பந்ததாரரை தற்காலிக சுகாதார ஊழியர்கள் சிறைபிடித்தனர். அவர் காரில் ஏறி செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர மத்திய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் சம்பளம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தற்காலிக சுகாதார ஊழியர்கள் கூறும்போது, ஒரு மாதம் மட்டும் பணிபுரிவதற்காக தேர்வு செய்யப்பட்டோம். ஒரு நாளைக்கு ரூ.600 சம்பளம் தருவதாக கூறினர். தற்போது சம்பளம் வழங்காததால் பாதிக்கப்பட்டு உள்ளோம். கொரோனா காலத்தில் குடும்பங்கள் வருமானம் இன்றி உள்ளது. எனவே சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story