காற்று மாசுபாடு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு


காற்று மாசுபாடு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு
x
தினத்தந்தி 14 Sep 2021 10:58 AM GMT (Updated: 14 Sep 2021 10:58 AM GMT)

காற்று மாசுபாடு குறித்து சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து மாநகராட்சி ஆய்வு அதிகாரி தகவல்.

சென்னை,

நாடு முழுவதும் காற்று மாசுபாட்டை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை குறைப்பதற்கு தேசிய தூய்மையான காற்று திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் தொகை அதிகம் கொண்ட 42 நகரங்களில் காற்றின் தர மேம்பாட்டிற்காக தனி மானியத்தை 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்தது. அதில் சென்னை, மதுரை, திருச்சி ஆகிய 3 நகரங்கள் அடங்கி உள்ளன. அதில் சென்னைக்கு ரூ.181 கோடியினை 15-வது நிதி ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

அந்தவகையில் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து காற்று மாசுபாடு குறித்து பல்வேறு ஆய்வுகளை செய்ய உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சென்னை ஐ.ஐ.டி இடையே கடந்த மே மாதம் 6-ந்தேதி கையெழுத்தானது. இந்த திட்டத்தை மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆலோசனையுடன் சென்னை ஐ.ஐ.டி செயல்படுத்தும். மேலும் அவ்வப்போது காற்றின் தர கண்காணிப்பு, தரபகுப்பாய்வு, தரவு பயன்பாடு, தொகுத்தல், அறிக்கை தயாரித்து மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சென்னை ஐ.ஐ.டி அனுப்ப உள்ளது. சென்னையில் நடத்தப்படும் இந்த ஆய்வின் நோக்கம் சுற்றுப்புற காற்று மாசுபாட்டிற்கான மூல பங்களிப்பு மதிப்பீடு, மாசுக்கான மூலங்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றை கண்டறிவதாகும். மேற்கண்ட தகவல் சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story