திண்டுக்கல்லில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திண்டுக்கல்லில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே பொன்னகரத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரிகளாக சிங்காரவேல், பாபுராஜ், செந்தில் ஆகியோர் உள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் வழக்கம் போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர்.
பின்னர் நேற்று காலை பூசாரி பாபுராஜ் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story