ரூ.25 லட்சம் கேட்டு முன்னாள் ஒன்றியக்குழு தலைவருக்கு மிரட்டல்


ரூ.25 லட்சம் கேட்டு முன்னாள் ஒன்றியக்குழு தலைவருக்கு மிரட்டல்
x
தினத்தந்தி 2 Oct 2021 5:31 PM GMT (Updated: 2 Oct 2021 5:31 PM GMT)

செஞ்சி அருகே ரூ.25 லட்சம் கேட்டு முன்னாள் ஒன்றியக்குழு தலைவருக்கு மிரட்டல் விடுத்ததாக பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. மீது புகார் தொிவிக்கப்பட்டது.

விழுப்புரம், 

செஞ்சி அருகே கல்லடிக்குப்பத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 60). பா.ம.க.வை சேர்ந்த வல்லம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவரான இவர், நேற்று காலை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் விவசாயம் மற்றும் கட்டிட ஒப்பந்த பணிகளை செய்து வருகிறேன். தற்போது வந்தவாசி- போளூர் சாலை விரிவாக்க பணியை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறேன். கடந்த 30-ந் தேதி வந்தவாசியை சேர்ந்த சக்திவேல், பாபுசர்தார் சாயபு, நரசிம்மன் ஆகியோர் நாட்டார்மங்கலத்தில் உள்ள எனது அலுவலகத்திற்கு வந்து செஞ்சி தொகுதி பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் ரூ.25 லட்சம் வாங்கி வரச்சொன்னார் என்றனர். இதுதொடர்பாக நான் கணேஷ்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டபோது வெளியூரில் இருப்பதாக கூறி தொடர்பை துண்டித்தார்.
பின்னர் சக்திவேல், செஞ்சி போலீசில் எனது மகன் உள்பட 3 பேர் மீது புகார் அளித்தார். அதன் பிறகு கணேஷ்குமாரின் உதவியாளர் அருண்மொழித்தேவன்,  சக்திவேல் உள்ளிட்ட 3 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 14 பேர் என் அலுவலகத்திற்குள் புகுந்து டி.வி., சி.சி.டி.வி. கேமரா மற்றும் அலுவலக பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு வெளியே நிறுத்தப்பட்டிருந்த எனது 2 கார்கள், லாரி, 3 மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியதோடு எங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துச்சென்றனர். இதில் என் அலுவலக பணியாளர் ராஜா என்பவர் காயமடைந்தார். இதுகுறித்து செஞ்சி போலீசில் புகார் அளித்தோம். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனக்கும் என் மகன்களுக்கும், உடைமைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 
மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரிப்பதாக கூறினார். 
இதுபற்றி கணேஷ்குமாரிடம் கேட்டபோது, எனக்கும், இந்த சம்பவத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, திருமண விழாக்களில் ஏழுமலையை 2 முறை சந்தித்துள்ளேன். எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவர் இதுபோன்று பொய்யான புகார் அளித்துள்ளார் என்றார்.

Next Story