வத்தலக்குண்டு அருகே கிணற்றில் தொழிலாளி பிணம் சாவில் சந்தேகம் என உறவினர்கள் மறியல்


வத்தலக்குண்டு அருகே கிணற்றில் தொழிலாளி பிணம் சாவில் சந்தேகம் என உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 2 Oct 2021 8:00 PM GMT (Updated: 2 Oct 2021 8:00 PM GMT)

வத்தலக்குண்டு அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக மிதந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது என உறவினர்கள் மறியல் செய்தனர்.

வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு ஒன்றியம் விருவீடு அருகே உள்ள சென்மார்பட்டியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 34). விவசாய தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் சென்மார்பட்டி அருகே தண்ணீர் இல்லாத ஒரு கிணற்றில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விருவீடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தகவல் அறிந்து வத்தலக்குண்டு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பால்ராஜ் உடலை கிணற்றிலிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இந்நிலையில் பால்ராஜ் சாவில் சந்தேகம் உள்ளது என கூறி அவரது உறவினர்கள் விருவீடு போலீஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதையடுத்து போலீசார், பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே உண்மை தெரியும் என்று கூறி அவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் பால்ராஜின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது  நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story