குடியரசு தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை


குடியரசு தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 24 Jan 2022 4:47 PM GMT (Updated: 24 Jan 2022 4:47 PM GMT)

குடியரசு தின விழாவையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


விழுப்புரம், 

நாட்டின் 73-வது குடியரசு தின விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

அந்த வகையில், விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் கலந்துகொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிடுகிறார்.

விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, காந்தி சிலை, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் இரவு, பகலாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

பஸ், ரெயில் நிலையங்களில் சோதனை

அதுபோல் மாவட்டத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் அனைத்திலும்  துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிநாதன் ஆகியோர் தலைமையில் வெடிகுண்டுகளை கண்டறியும் சிறப்பு பிரிவு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலமும், மோப்ப நாய் ராணி  மூலமும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

பயணிகள் கொண்டு வரும் உடைமைகள் கடும் சோதனை செய்யப்பட்ட பின்னரே ரெயில் நிலையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ரெயில் நிலைய நுழைவுவாயில் அருகில் மெட்டல் டிடெக்டர் கருவியின் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளங்கள் கண்காணிப்பு

மேலும் போலீஸ் மோப்ப நாய் உதவியுடனும் ரெயில் நிலைய பகுதி முழுவதும் தீவிர வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். இதுதவிர ரெயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து ரெயில்களிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி ரெயில்வே தண்டவாளங்களை கண்காணிக்கும் பணியும் நடந்து வருகிறது.

மொத்தத்தில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.

அணிவகுப்பு ஒத்திகை

இதனிடையே விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் மைதானம் மற்றும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணி வகுப்பு மைதானம் ஆகிய இடங்களில் காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

 விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு கனகராஜ் தலைமையில் 50 போலீசார் கலந்துகொண்டு பேண்டு வாத்தியம் இசைக்கேற்றவாறு துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Next Story