10 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் தொல்லை


10 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 24 Jan 2022 5:31 PM GMT (Updated: 24 Jan 2022 5:31 PM GMT)

திருவாரூர் அருகே 10 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த சமையல் தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருவாரூர்;
திருவாரூர் அருகே 10 வயது சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த சமையல் தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்
பாலியல் தொல்லை
திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேத்தப்பா(வயது 22). சமையல் தொழிலாளியான இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தனது வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்த 10 வயது சிறுமியின் வாயை பொத்தி அவளை தூக்கி சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பி ஓடி வந்து நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேத்தப்பாவை தேடி சென்றனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 
வழக்குப்பதிவு
இந்த நிலையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமியை அவரது பெற்றோர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவள் சிகிச்சை பெற்று வருகிறாள். 
இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சேத்தப்பாவை தேடி வருகின்றனர். 

Next Story