பச்சிளம் பெண் குழந்தை உடல் ஓடை பாலத்தில் வீச்சு
பச்சிளம் பெண் குழந்தை உடல் ஓடை பாலத்தில் வீசப்பட்டிருந்தது.
வேப்பந்தட்டை:
தொப்புள் கொடியுடன்...
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மறவநத்தம் கிராமத்தில் உள்ள ஓடை பாலம் அருகே நேற்று காலை பச்சிளம் பெண் குழந்தையின் உடல் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து வி.களத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீசிச்சென்றது யார்?
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், அந்த பெண் குழந்தை நேற்று முன்தினம் இரவு பிறந்திருக்கலாம் என்பதும், பிறந்து சில மணி நேரங்களே ஆன அந்த குழந்தையை யாரோ ஓடை பாலம் அருகே வீசிச்சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து ஓடை பாலம் அருகே வீசப்பட்டபோது அந்த குழந்தை உயிருடன் இருந்ததா? அந்த குழந்தையை வீசிச்சென்ற கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? பெண் குழந்தை என்பதால் வீசி சென்றனரா? அல்லது தவறான உறவினால் பிறந்ததால் வீசி சென்றனரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனைகளில் விசாரணை
மேலும் சுகாதாரத்துறையினர், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்ற ெபண் யாரேனும் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பச்சிளம் குழந்தையின் உடல் ஓடை பாலம் அருகே கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story