காரைக்கால் மீனவர்களின் வலைகள் பறிமுதல்; மீன்கள் ஏலம்


காரைக்கால் மீனவர்களின் வலைகள் பறிமுதல்; மீன்கள் ஏலம்
x
தினத்தந்தி 25 Jan 2022 5:31 PM GMT (Updated: 25 Jan 2022 5:31 PM GMT)

தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் விதிகளை மீறி தங்கு கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்ட காரைக்கால் மீனவர்களின் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மீன்கள் ஏலம் விடப்பட்டது.

சேதுபாவாசத்திரம்:-

தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் விதிகளை மீறி தங்கு கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்ட காரைக்கால் மீனவர்களின் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மீன்கள் ஏலம் விடப்பட்டது. 

தங்கு கடல் மீன்பிடி தொழில்

நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீன்பிடி விசைப்படகுகள் தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் விதிகளை மீறி தங்கு கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதால் தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி வலைகள் சேதம் அடைகிறது. மேலும் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. 
இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட மீனவர்கள் எழுப்பிய புகாரின்ேபரில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் மீன்வளத்துறை ஆய்வாளர் ஆனந்த், மீன்வள மேற்பார்வையாளர் சுரேஷ், கடல் சட்ட மீன்பிடி அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் நவநீதன், சேதுபாவாசத்திரம் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், அதிராம்பட்டினம் கடலோர காவல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் போஸ்நடனம் உள்ளிட்டோர் தஞ்சை மாவட்ட கடல் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

மீன்கள் ஏலம்

18 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 2 விசைப்படகுகளில் மீனவர்கள் விதிகளை மீறி தங்கு கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. 
அதிகாரிகள் வந்த படகுகளை கண்டதும் அவர்கள் வலைகளை விட்டு, விட்டு தப்பி சென்றனர். இதையடுத்து அதிகாரிகள் வலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அதில் பிடிபட்டிருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள மீன்களை அதிகாரிகள் ஏலத்தில் விட்டு, அந்த தொகையை அரசு கணக்கில் செலுத்தினர். 

Next Story