கல்லல் அருகே களைகட்டிய மஞ்சுவிரட்டு


கல்லல் அருகே களைகட்டிய மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 25 Jan 2022 7:31 PM GMT (Updated: 25 Jan 2022 7:31 PM GMT)

கல்லல் அருகே அந்தரநாச்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

கல்லல்
கல்லல் அருகே அந்தரநாச்சியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி
காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே தேவபட்டு கிராமத்தில் அந்தர நாச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாத செவ்வாய் பொங்கல் விழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்தாண்டு இந்த விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக கிராமத்தில் இருந்து ஆண்கள் மட்டும் கோவிலுக்கு காலையில் வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். 
அதைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் கட்டுமாடுகளை கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. இந்த காளைகளை அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அடக்க முயன்றனர். இதில் சில காளைகள் அவர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் மாடுபிடி வீரர்களையும், பார்வையாளர்களையும் மிரள வைக்கும் வகையில் அங்கிருந்து சீறிபாய்ந்து சென்றது. இந்த மஞ்சுவிரட்டு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. 
இதைத்தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு தேவபட்டு கிராமத்தில் இருந்து கிராம மக்கள் அதிர்வேட்டுகள் முழங்க கோவிலுக்கு வந்தனர். அப்போது நூற்றுக்கணக்கான பெண்கள் தாம்பூலத்தில் பூ மாலைகள் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு அந்தர நாச்சியம்மனுக்கு மாலைகள் சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
காளைகள் முட்டியதில் 4 பேர் காயம்
தொடர்ந்து மஞ்சுவிரட்டு தொழுவத்தில் 250 மாடுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு அவிழ்த்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அவிழ்த்து விடப்பட்டது. இதை அங்கிருந்த மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் ஒரு சில காளைகள் அவர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் பிடிபடாமல் சென்றது. காளைகள் முட்டியதில் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தினர் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். முன்னதாக காளைகளுக்கு கால்நடை பரிசோதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பார்வையாளர்கள் திரண்டதால் கல்லல்-காரைக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.

Next Story