ராமநத்தத்தில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


ராமநத்தத்தில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 Jan 2022 4:40 PM GMT (Updated: 31 Jan 2022 4:40 PM GMT)

ராமநத்தத்தில் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநத்தம், 

ராமநத்தம் அடுத்த கொரக்கை கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் மணிகண்டன் (வயது 41). இவர் ராமநத்தம் பஸ் நிலையம் அருகே ஓட்டல் நடத்தி வந்தார். மணிகண்டன் தினசரி வியாபாரம் முடிந்ததும், ஓட்டல் மாடியில் உள்ள அறையில் தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல், ஓட்டலை பூட்டி விட்டு மாடியில் உள்ள தனது அறையில் தூங்க சென்றார். ஊழியர்கள் பக்கத்து அறையில் தங்கினர்.  இந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் மணிகண்டன் அறை கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஊழியர்கள் மணிகண்டன் தங்கியிருந்த அறை கதவை தட்டினர். இருப்பினும் எந்த சத்தமும் இல்லை. இதனால் சந்தகமேடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அறையில் மணிகண்டன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். 

தொழிலில் நஷ்டம்

பின்னர் இதுபற்றி ராமநத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் மணிகண்டன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மணிகண்டன் கடன் பிரச்சினை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் திருச்சி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. 
மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story