விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்


விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2022 6:25 PM GMT (Updated: 31 Jan 2022 6:25 PM GMT)

யூரியா உரங்களுடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

யூரியா உரங்களுடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கட்டாயப்படுத்தி விற்பனை

யூரியா உரங்களுடன் தேவையற்ற இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பலராமன் தலைமை தாங்கினார்.

 இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன், பொருளாளர் உதயகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் வீரபத்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்தையன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியாவுடன் தரபரிசோதனை செய்யப்படாத தேவையற்ற இணை பொருட்கள் விற்பனை செய்வதை பலமுறை ஆதாரத்துடன் முறையிட்டும் வேளாண்மை அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. 

ஒரு மூட்டை யூரியா விலை ரூ.265. அதை வாங்க தேவையற்ற இணை பொருள் சேர்த்து ரூ.700 என விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு வேளாண்மை அதிகாரிகள் துணை போகின்றனர்.

பேச்சுவார்த்தை

மேலும் அனைத்து வகை உரங்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை வழங்கி பாதுகாக்க வேண்டும். கடந்த ஆட்சியில் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பலகோடி ரூபாய் ஊழல் செய்த வேளாண்துறை அதிகாரிகளை சிறையில் அடைக்க வேண்டும் என்றனர். 

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து சாப்பிட்டனர். 

பின்னர் அவர்களிடம் போலீசார் பேசி, பேச்சுவார்த்தைக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு முக்கிய நிர்வாகிகளை அழைத்து வந்தனர். அவர்களிடம் மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். 

அதைத்தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இதனால் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story