வங்கி கணக்குடன் ‘ஆதார்’ இணைப்பது கட்டாயம்


வங்கி கணக்குடன் ‘ஆதார்’ இணைப்பது கட்டாயம்
x
தினத்தந்தி 22 April 2018 12:00 AM GMT (Updated: 21 April 2018 8:30 PM GMT)

வங்கி கணக்குடன் ‘ஆதார்’ இணைப்பது கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தொடுத்து, அவை நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என பாரத ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

கே.ஒய்.சி. (‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்’) என்னும் நடைமுறை விதியின் ஒரு பகுதியாக இதை ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

அதே நேரத்தில், இது சுப்ரீம் கோர்ட்டு வழங்க உள்ள இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருத்தப்பட்ட நடைமுறைப்படி வங்கியில் ‘பயோமெட்ரிக் ஐ.டி.’க்கு விண்ணப்பிக்கிறவர்களிடம் ஆதார் எண், பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அல்லது படிவம் எண்.60 ஆகியவற்றை கேட்டுப்பெற வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.


Next Story