அத்துமீறிய பாகிஸ்தான் படைகள்; இந்திய பதிலடி தாக்குதலை நிறுத்த கெஞ்சுகிறது


அத்துமீறிய பாகிஸ்தான் படைகள்; இந்திய பதிலடி  தாக்குதலை நிறுத்த கெஞ்சுகிறது
x
தினத்தந்தி 21 May 2018 7:01 AM GMT (Updated: 21 May 2018 7:01 AM GMT)

அத்துமீறிய பாகிஸ்தான் படைகள் இந்திய பதிலடி தாக்குதலை நிறுத்த கோரி கெஞ்சுகிறது.

ஜம்மு

ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாடு கோடு, சர்வதேச எல்லைப்பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த ஆண்டில்  மட்டும் 700 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 18 பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 38 பேர் பலியாகி உள்ளனர். 

பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் ராணுவத்துக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம் அழிக்கப்பட்டதால் பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். 

இதையடுத்து, எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடனடியாக தாக்குதலை நிறுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், பாகிஸ்தான் பகுதியில் பதுங்கு முகாமில் ஏற்பட்ட சேதத்தின் வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது. அதில், பாகிஸ்தான் நிலைகள் தகர்க்கப்பட்டது உள்ளிட்ட காட்சிகள் அடங்கி உள்ளன.

இவ்வாறு வேண்டுகோள் விடுத்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் மீண்டும் முன்னறிவிக்கப்படாத துப்பாக்கி சூடு தாக்குதலை நேற்றிரவு 10.30 மணியளவில் நடத்தியுள்ளனர். சிறிய ரக ஆயுதங்களை கொண்டு ராம்கார் பிரிவில் நாராயணபூர் பகுதியில் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தினர்.  இதில் எல்லை பாதுகாப்பு படையினரின் முகாம்கள் மற்றும் கிராமங்கள் இலக்கிற்கு உள்ளாகின.

நம் ராணுவம் கொடுத்த பதில் அடியை தாங்க முடியாத பாகிஸ்தான் ராணுவ வீரர்கள், பீதியடைந்துள்ளனர். 'தாக்குதலை நிறுத்துங்கள்' என, ராணுவ அதிகாரிகள் வாயிலாக, கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினரை கட்டுப்படுத்த பதில் தாக்குதல் நடத்தினர்.  தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்து வருகிறது.  இதில் சேத விவரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. நம் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில், பாகிஸ்தானின் நிலைகள் தகர்க்கப்பட்டு உள்ளன. பாகிஸ்தான் ராணுவத்திற்கு உயிரிழப்பும் நேரிட்டு உள்ளது.

மூன்று நாட்களாக, பாகிஸ்தான் ராணுவம் எங்கெல்லாம் அத்துமீறியதோ, அங்கெல்லாம் பாகிஸ்தான்  நிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. 

இதேபோல் ஆர்னியா செக்டாரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று காலை 7 மணியளவில் பாகிஸ்தான் படையினர் தாக்குதலைத் தொடங்கினர். 3 இந்திய நிலைகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் கூடுதலாக இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகள் குவிக்கப்பட்டு, பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சண்டையில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை. 

Next Story