தலைமை ஆசிரியர்- ஆசிரியர்கள், மாணவர்கள் 18 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக 9-ம் வகுப்பு மாணவி புகார்
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் என 18 பேர் கடந்த 8 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் புகார் அளித்து உள்ளார்.
பாட்னா
பீகார் சரண் மாவட்டத்தில் பார்சாகர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு ஹர் கிஷோர் ராய்யை சந்தித்து புகார் ஒன்று அளித்து உள்ளார். அதில் கடந்த 8 மாதங்களாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் உடன் படிக்கும் மாணவர்கள் என 18 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார்.
இதைத் தொடர்ந்து போலீசார் தலைமை ஆசிரியர் உதய்குமார் என்ற முகுந்த் சிங், ஆசிரியர் பாலாஜி மற்றும் உடன் படிக்கும் 2 மாணவர்கள் என 4 பேரை கைது செய்து உள்ளனர்.
மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் மற்ற குற்றவாளிகளையும் தேடி வருகிறார்கள். முதல் தகவல் அறிக்கையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் உடன் படிக்கும் மாணவர்கள் 3 பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறபட்டு உள்ளது.
அவர்கள் அதனை வீடியோவை எடுத்து கொண்டு, பள்ளிக்கூடத்திலோ அல்லது வீட்டிலோ யாரிடமோ புகார் செய்தால், வீடியோவை பொதுமக்களுக்கு காட்டி விடுவதாக அச்சுறுத்தி உள்ளனர்.
பின்னர் அந்த வீடியோவை மற்ற மாணவர்களுக்கு ஷேர் செய்து உள்ளனர். பின்னர் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அந்த வீடியோ கிடைத்து உள்ளது. இதை தொடர்ந்து மாணவி மிரட்டபட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.
அந்த பெண்ணால் சுட்டிக் காட்டப்பட்ட 18 பேரும் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்று உள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பீகாரில் அதிகரித்து வருகின்றன. அரசாங்க ஆவணங்களின் படி, 2018 ன் முதல் மூன்று மாதங்களில் 127 சிறுமிகளும் பெண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இதே விவரம் ஜூன் மாதம் இறுதியில் இரண்டு மடங்காகி உள்ளது.
Related Tags :
Next Story