உத்தரப்பிரதேசத்தில் மருத்துவரின் பேராசையால் உயிரிழந்த சிறுவன்


உத்தரப்பிரதேசத்தில் மருத்துவரின் பேராசையால் உயிரிழந்த சிறுவன்
x
தினத்தந்தி 9 July 2018 2:55 AM GMT (Updated: 9 July 2018 2:55 AM GMT)

லஞ்சம் கொடுக்கும் வரை சிகிச்சையளிக்க முடியாது என்ற மருத்துவரின் பேராசையால் சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரேலி,

உத்தரப்பிரதேசத்திலுள்ள மாவட்ட மருத்துவமனை ஓன்றில் லஞ்சம் கொடுக்கப்படாததால் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரால், அச்சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பதாவுன் மாவட்டம் பால கிஷான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தராம்பால். இவரது 10 வயது மகன் தீன்தயாள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளான். இந்நிலையில் பதாவுன் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக பரேலி மருத்துவமனையில் சேர்க்குமாறு அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தராம்பால் தன் மகன் தீன்தயாளனை சிகிச்சைக்காக பரேலி மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக வந்த தரம்பாலை அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் மோசமான முறையில் நடத்தியதோடு மட்டுமல்லாமல், லஞ்சம் கொடுத்தால் தான் உன் மகனுக்கு சிகிச்சையளிப்போம் என கூறியுள்ளனர். 

”நாங்கள் மருத்துவமனையில் மிகவும் மோசமான முறையில் நடத்தப்பட்டோம். மேலும் அங்குள்ள மருத்துவர்கள் ரூ.10,000 லஞ்சமும், செலிவியருக்கும் ரூ.500-ம் தரகோரி கேட்டனர். மேலும் லஞ்சம் கொடுக்கும் வரை உன் மகனுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் எனக் கூறினர். என்னால் பணம் கட்ட இயலாத காரணத்தால் தொடர்ந்து உடல் நிலை மோசமாகி என் மகனுடன் அங்கிருந்து வெளியேறி லக்னோ மருத்துவமனைக்கு சென்றேன். இருப்பினும் 5 மணி நேரம் கழித்து அவன் இறந்து விட்டான். ஆம்புலன்ஸ் குறித்த நேரத்தில் வராமலிருந்ததே என் மகன் இறப்புக்கு காரணம். மேலும் என் மகன் இறப்புக்கு காரணமான பரேலி மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளேன்” என அவர் கூறினார்.

இது குறித்து கூறிய போலீஸ் கண்காணிப்பாளர் அபிநந்தன் சிங் கூறுகையில், ”சிறுவனின் உடல் கூறாய்வு முடிந்தது. சிறுவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பரேலி மாவட்ட மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை விசாரித்து வருகிறோம்” எனக் கூறினார்.

Next Story