மராத்தா சமுதாயத்தினர் போராட்ட விவகாரம்: முதல்-மந்திரி, எம்.பிக்களை சந்திக்கிறார் அமித் ஷா


மராத்தா சமுதாயத்தினர் போராட்ட விவகாரம்:  முதல்-மந்திரி, எம்.பிக்களை சந்திக்கிறார் அமித் ஷா
x
தினத்தந்தி 6 Aug 2018 10:43 AM GMT (Updated: 6 Aug 2018 10:43 AM GMT)

மராத்தா சமுதாயத்தினர் போராட்டம் விவகாரம் குறித்து முதல்-மந்திரி, எம்.பிக்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #AmitShah #MarathaReservation

புதுடெல்லி,

மராட்டியத்தின் மக்கள் தொகை சுமார் 12 கோடி. இதில் 30 சதவீதம் பேர் மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தங்களுக்கு 16 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வருகின்றனர். 

கடந்த 25-ந்தேதி இடஒதுக்கீடு கோரி மும்பை, தாேன, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். முழு அடைப்பு நடந்த மாவட்டங்கள் மட்டும் இன்றி மாநிலம் முழுவதும் கலவரம் வெடித்தது. ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 

பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. குறிப்பாக நவிமும்பையில் நடந்த வன்முறைக்கு வாலிபர் ஒருவர் பலியானார். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 6 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மராத்தா சமுதாய தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது சிறப்பு சட்டசபை கூட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தார். இதனால் கலவரம் சற்று ஓய்ந்தது.

இந்தநிலையில் வரும் 9-ந்தேதி மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட போவதாக மராத்தா சமுதாயத்தினர் அறிவித்து உள்ளனர். இது மாநிலத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்பு படையை அனுப்பவேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இந்தநிலையில் மராத்தா சமுதாயத்தினர்  போராட்டம் விவகாரம்  குறித்து அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மற்றும்  மராட்டிய எம்.பிக்களை இன்று இரவு 7 மணி அளவில் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சந்திப்பின் போது மராத்தா சமுதாயத்தினர் நடத்தி வரும் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story