மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படும் என்ற செய்தி மகிழ்ச்சி தருகிறது - மம்தா பானர்ஜி


மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படும் என்ற செய்தி மகிழ்ச்சி தருகிறது - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 8 Aug 2018 7:26 AM GMT (Updated: 8 Aug 2018 7:26 AM GMT)

மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படும் என்ற தற்போதைய தகவல் மகிழ்ச்சி தருகிறது என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். #Karunanidhi


கொல்கத்தா,

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நல குறைவால் நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 95.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அக்கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.  இதுபற்றிய திமுகவின் மனு மீது நேற்று இரவு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷின் வீட்டில் வைத்து விசாரணை நடைபெற்றது.

இந்த மனு மீது பதிலளிக்கும்படி இன்று காலை 8 மணிக்கு தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தி.மு.க. தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம் தொடங்கியது. இரு தரப்பினரும் அனல் பறக்கும் வாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு வாதமும் நிறைவடைந்ததும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், சுந்தர் அமர்வு தீர்ப்பு  வழங்கியது.

இதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யப்போவது இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.

மெரினா கடற்கரையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடத்தை தூய்மைபடுத்தும் பணிகள் மற்றும் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன், ஜெ.அன்பழகன். எ.வ.வேலு உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது குறித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லை என நேற்று வெளியான தகவலால் கவலையடைந்தேன். கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவது குறித்து பிரதமரிடம் பேசினேன். முதல்-அமைச்சரை தொடர்பு கொண்ட போது தகவல் கிடைக்கவில்லை. அரசியலில் மூத்த தலைவர். அவரது மறைவு ஒரு பெரிய இழப்பு.  மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படும் என்ற தற்போதைய தகவல் மகிழ்ச்சி தருகிறது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கோபாலபுரத்தில் வைக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு மம்தா பானர்ஜி நேற்று இரவு வந்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story