கேரளாவில் நிலச்சரிவில் சிக்கவிருந்த குடும்பத்தை காப்பாற்றிய நாய்!!


கேரளாவில் நிலச்சரிவில் சிக்கவிருந்த குடும்பத்தை காப்பாற்றிய நாய்!!
x
தினத்தந்தி 12 Aug 2018 10:07 AM GMT (Updated: 12 Aug 2018 10:07 AM GMT)

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கவிருந்த குடும்பத்தை நாய் காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #KeralaFloods2018

இடுக்கி,

கேரளாவில்  50 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருகிறது.  மேலும் கேரளாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையின் காரணமாக இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். 35,000 க்கும் மேற்பட்டோர்  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள 24 அணைகள் நிரம்பி முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

இடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருவதால் அதன் துணை அணையான செருதோணி அணையில் உள்ள 5 மதகுகளில் 3-வது மதகில் மட்டும் நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மீதமுள்ள 4 மதகுகளும் நேற்று திறக்கப்பட்டன. 40 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் 5 மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் செருதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கரையோரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்கும்படி போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் மோகனன் என்பவர் இடுக்கி மாவட்டத்தின் கஞ்சிகுழி என்ற ஊரில் தனது குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். விடியற்காலை 3 மணி அளவில் அவர் வீட்டின் நாய் குரைத்துள்ளது. ஆனால் அது வழக்கமான ஒன்று தான் என்று எண்ணி அவர் தூங்க சென்றுவிட்டார். சிறிது நேரத்திற்கு பின் வழக்கத்திற்கு மாறாக ஊளையிட்டுள்ளது. இதையடுத்து வெளியே வந்து பார்த்த மோகனன்

வீட்டின் அருகே நிலச்சரிவு ஏற்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே தன் மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார். மாடியில் இருந்த அவரது தாத்தா, பாட்டியை காப்பாற்ற முடியாமல் போனது. 

இது பற்றி அவர் கூறுகையில் "என் வீடு பெரியார் அணையை ஒட்டி உள்ள இடத்தில் இருந்ததால் எங்களை அதிகாரிகள் வெளியேற கூறினார்கள் .இதை அடுத்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த வீட்டிற்கு வாடகைக்கு வந்தேன். அப்படி இருந்தும் இங்கேயும் நிலச்சரிவு ஏற்பட்டு என் தாத்தா, பாட்டியை இழந்துவிட்டேன் என கண்ணீர் மல்க கூறினார்.

Next Story