மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி


மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? - ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 24 Sep 2018 11:30 PM GMT (Updated: 24 Sep 2018 8:36 PM GMT)

‘ரபேல்’ போர் விமான விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பயப்படுவது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி விடுத்தார்.

அமேதி,

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான அமேதிக்கு நேற்று சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி, தன்னை காவலாளி என்று சொல்லிக்கொள்கிறார். ஆனால், ஒரு காவலாளியே ஏழை மக்களிடம் கொள்ளையடித்தது துரதிருஷ்டவசமானது. ஏழைகளிடம் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி பணத்தை பறித்து, அனில் அம்பானியின் பாக்கெட்டில் போட்டுள்ளார்.

பிரதமர் மோடி, பிரான்ஸ் நாட்டுக்கு போகிறார். அங்கு அனில் அம்பானி கம்பெனிக்கு கோடிக்கணக் கான ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை அளிக்கிறார். காவலாளி ஏன் அப்படி செய்தார் என்று அறிந்து கொள்ள மக்கள் விரும்புகிறார்கள்.

பிரதமர் பெரிது பெரிதாக சொற்பொழிவு ஆற்றுகிறார். ஆனால், ரபேல் விவகாரம் பற்றி ஒரு வார்த்தை கூட பேச மறுக்கிறார். பிரான்ஸ் முன்னாள் அதிபர், பிரதமர் மோடியை ‘திருடன்’ என்கிறார். ஆனாலும், மோடி எதுவும் பேசவில்லை.

நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பியபோது கூட அவர் என் கண்களை பார்ப்பதை தவிர்த்து விட்டார். அவருக்கு பதில் அளிக்க தைரியம் இல்லை.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘ரபேல்’ போர் விமான விவகாரத்தில், மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறுகிறார். அப்படியானால், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட பயப்படுவது ஏன்?

இந்த ஆட்சியில் விவசாயிகளும், ஏழைகளும் அழுது கொண்டிருக்கிறார்கள். ஆனால், எல்லா பலன்களையும் அனில் அம்பானி, விஜய் மல்லையா போன்ற 10 பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் அளிக்கிறார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.


Next Story