ம.பி.யில் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடுமையான போட்டி; ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - கருத்துக்கணிப்பு


ம.பி.யில் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடுமையான போட்டி; ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - கருத்துக்கணிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2018 12:55 PM GMT (Updated: 7 Dec 2018 12:55 PM GMT)

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது. 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் இத்தேர்தல்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்த நிலையில் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

ம.பி. கடும் போட்டி

பா.ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 40 சதவிதம் வரையிலான வாக்குகளை பெறும் 102-120 தொகுதிகளில் வெற்றிப்பெறும். காங்கிரஸ் 41 சதவித வாக்குகளை பெறும் 104-122 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியை புறக்கணித்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1-3 தொகுதிகளில் வெற்றிப்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 230 தொகுதிகளில் பா.ஜனதா 126 தொகுதிகளிலும், காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ராஜஸ்தானில் காங்கிரஸ்  

பா.ஜனதா ஆட்சி செய்யும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்புக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 119 முதல் 141 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறும் என்றும் பா.ஜனதா 55 முதல் 72 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 105 தொகுதிகளிலும், பா.ஜனதா 85 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஷ்காரில் ஆளும் பா.ஜனதா கட்சியே ஆட்சிக்கு வருகிறது என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று தெலுங்கானாவிலும் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியே வெற்றிப்பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story