காஷ்மீரில் புல்வாமா தாக்குதலுக்கு பின் 41 தீவிரவாதிகள் பலி; இந்திய ராணுவம்
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பின் 41 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர். இந்த தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தி அழித்தது.
இதுபற்றி இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் தில்லான் இன்று கூறும்பொழுது, இந்த வருடம் மொத்தம் 69 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் 41 பேர் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின் பலியானவர்கள். இவர்களில் 25 பேர் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்தவர்கள். இந்த 25 பேரில் 13 பேர் பாகிஸ்தானியர்கள். 12 பேர் ஏ பிளஸ் பிரிவு தீவிரவாதிகள். 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
இதனால் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்திற்கு தலைமை ஏற்க ஒருவரும் முன்வராத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பின் அந்த இயக்கம் பாகிஸ்தானின் முயற்சியுடன் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தீவிரவாதிகள் என துப்பாக்கி தூக்கும் எவரும் கொல்லப்படுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story