ரூ.2,168 கோடி மானியத்தை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் - மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் கோரிக்கை


ரூ.2,168 கோடி மானியத்தை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் - மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 9:19 PM GMT)

14-வது நிதிக்குழு பரிந்துரைத்த ரூ.2,168 கோடி மானியத்தை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

புதுடெல்லி,

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லியில் மத்திய ரெயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து புதிதாக மந்திரி பதவியேற்று உள்ளதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்துக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை மத்திய மந்திரியிடம் வழங்கினார்.

அந்த மனுவில், 14-வது நிதிக்குழு பரிந்துரைத்தப்படி தமிழகத்தில் உள்ள ஊரக மற்றும் நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2017-18-ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியம் ரூ.560.15 கோடி மற்றும் 2018-19-ம் ஆண்டுக்கான அடிப்படை மானியத்தின் 2-வது தவணைத் தொகையான ரூ.1,608.03 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக 627.89 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்த அனுமதிக்க வேண்டும் என்று விமான நிலைய ஆணையத்தை கேட்டுக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தன.


Next Story