“ராமரின் வம்சாவளி நாங்கள்” - மேவார் அரச குடும்பமும் சொந்தம் கொண்டாடுகிறது


“ராமரின் வம்சாவளி நாங்கள்” - மேவார் அரச குடும்பமும் சொந்தம் கொண்டாடுகிறது
x
தினத்தந்தி 13 Aug 2019 9:45 PM GMT (Updated: 13 Aug 2019 9:00 PM GMT)

ராமரின் வம்சாவளி நாங்கள் என மேவார் அரச குடும்பமும் சொந்தம் கொண்டாடுகிறது.

உதய்பூர்,

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது பற்றிய மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு விசாரித்து வருகிறது. “ராமரின் வம்சாவளியினர் அயோத்தியில் இன்னும் வசித்து வருகிறார்களா?” என்று கடந்த 9-ந்தேதி நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த பின்னணியில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த பா.ஜனதா பெண் எம்.பி. தியா குமாரி, தங்கள் குடும்பம் ராமரின் மகன் குசாவின் வம்சாவளியை சேர்ந்தது என்று சொந்தம் கொண்டாடினார்.

இந்நிலையில், மற்றொரு அரச குடும்பமும் ராமர் மீது உரிமை கொண்டாடி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள மேவார் அரச குடும்பம்தான், தங்களை ராமரின் வம்சாவளி என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக அக்குடும்பத்தை சேர்ந்த அரவிந்த் சிங் மேவார் கூறியதாவது:-

எங்கள் குடும்பம் ராமரின் நேரடி வம்சாவளியினர் என்பது சரித்திரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்காக ராமர் பிறந்த இடம் மீது நாங்கள் உரிமை கொண்டாட விரும்பவில்லை. ஆனால், அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story