நிலவை நெருங்குகிறது சந்திரயான் -2 : நான்காவது முறையாக சுற்றுவட்டப்பாதை மாற்றியமைப்பு


நிலவை நெருங்குகிறது சந்திரயான் -2 : நான்காவது முறையாக சுற்றுவட்டப்பாதை மாற்றியமைப்பு
x
தினத்தந்தி 30 Aug 2019 2:45 PM GMT (Updated: 30 Aug 2019 2:45 PM GMT)

சந்திரயான்-2 விண்கலத்தின் நிலவு சுற்றுவட்டப்பாதை நான்காவது முறையாக மாற்றியமைக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்- 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் III ஏவுகலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது,  ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் துவங்கியது. 

ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம்,  ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது.  அதன்பின் நிலவில் தரையிறங்குவதற்காக அதன் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் மூன்றாவது முறையாக சந்திரயானின் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டதையடுத்து இன்று நான்காவது முறையாக மீண்டும் அதன் சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 1ஆம் தேதியன்று மீண்டும் ஒருமுறை சுற்றுவட்டப்பாதை மாற்றியமைக்கப்படவுள்ளது.

இதன் மூலமாக நிலவின் தரைப்பகுதியை நெருங்கி வரும் சந்திரயான்-2 விண்கலமானது, வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Next Story