வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை போராட்டம்?


வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை போராட்டம்?
x
தினத்தந்தி 30 Aug 2019 4:13 PM GMT (Updated: 30 Aug 2019 4:13 PM GMT)

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நாளை நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

பொதுத்துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். பொதுத்துறை வங்கி தலைவர்களை சந்தித்த பிறகு நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது , பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை இணைக்கப்படுகிறது.  ரூ.17.5 லட்சம் கோடி ரூபாய் வணிகத்துடன் எஸ்பிஐக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவாகும்.

இது, தற்போதைய பஞ்சாப் நேஷனல் வங்கி அளவைவிட, 1.5 மடங்கு பெரியதாகும். இந்த இணைப்பின் மூலம் நாடு முழுக்க 11, 437 கிளைகள் கொண்ட நெட்வொர்க்காக இவை மாறும். 

இதேபோல, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்படுகிறது. நாட்டின் 3வது பெரிய நெட்வொர்க் வங்கியாக இது மாறும்.

இதேபோல, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய மூன்றும் இணைக்கப்படும்.

இந்தியன் வங்கி,  அலகாபாத் வங்கியுடன் இணையும். இந்த இணைப்பின் மூலம் 7வது பெரிய நெட்வொர்க்காக மாறும்.

2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இன்றைய அறிவிப்புக்கு பிறகு நாட்டில் மொத்தமே, 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். இவ்வாறு இணைக்கப்படுவதால், வங்கிகள் கடன் கொடுக்கும் அளவு அதிகரிக்கும், நெட்வொர்க் அதிகரிக்கும், வங்கி, வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள் என அனைத்து தரப்புக்கும் இதனால் நன்மை கிடைக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்நிலையில்,  வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து  நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நாளை நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,

எங்களுக்கு மெகா வங்கிகள் மற்றும் மெகா இணைப்புகள் தேவையில்லை. மிகப்பரந்த நாட்டில் லட்சக்கணக்கான கிராம மக்களுக்கு வங்கி வசதிகள் சேவை கூட இல்லை. வங்கிகள் இணைப்பு தொடர்பான அறிவிப்புகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கூறினார்.

வங்கிகள் இணைப்பு அறிப்பை திரும்ப பெறவில்லை என்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இந்த போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.  

Next Story