அரசியல் சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு - நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு


அரசியல் சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு - நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 26 Nov 2019 7:00 AM GMT (Updated: 26 Nov 2019 9:19 PM GMT)

இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டதன் 70-வது ஆண்டு தின விழாவையொட்டி நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, அரசியல் அமைப்பு நமக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்கு போன்றது என கூறினார்.

புதுடெல்லி,

கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி, நாட்டின் அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் 70-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடங்கிய கூட்டு கூட்டம், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.

அதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.

கூட்டத்தில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

இந்த நாளில், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசித்து வரும் இந்தியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், எவ்வித அச்சமோ, அனுதாபமோ, பாரபட்சமோ இல்லாமல் இதை உருவாக்கி உள்ளனர்.

70 ஆண்டுகளாக அரசியல் சட்டம் பெற்றுள்ள மரியாதைக்கு மக்களே காரணம்.

அரசியல் சட்டம், நாட்டின் மிக உயர்ந்த சட்டம் ஆகும். உரிமையும், கடமையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். நமது அரசியல் சட்டம், பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் மோடி பேசியதாவது:-

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழக்காத 130 கோடி இந்தியர்களுக்கும் தலை வணங்குகிறேன். 70 ஆண்டுகளாக, அரசியல் சட்டத்தை புனித நூலாகவும், வழிகாட்டும் ஒளிவிளக்காகவும் மக்கள் கருதி வருகின்றனர்.

அரசியல் சட்டம், நமது கடமை, உரிமை இரண்டையுமே வலியுறுத்துகிறது. உரிமை மீது பல ஆண்டுகளாக கவனம் செலுத்தி விட்டோம். கடமை மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. கடமையை நிறைவேற்றாமல் நமது உரிமைகளை பாதுகாக்க முடியாது. மகாத்மா காந்தி, இரண்டையுமே சமமாக கருதினார். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாநிலங்களவையின் 250-வது கூட்டத்தொடரை குறிக்கும்வகையில், ரூ.250 மதிப்புள்ள வெள்ளி நாணயத்தையும், ரூ.5 மதிப்புள்ள தபால் தலையையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.

மாநிலங்களவை தொடர்பான புத்தகத்தையும், மக்களவை காலண்டரையும் அவர் வெளியிட்டார்.


Next Story