“சமூகத்தில் பிளவையும், மோதலையும் உருவாக்கும் முயற்சி” - மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்ப்பு


“சமூகத்தில் பிளவையும், மோதலையும் உருவாக்கும் முயற்சி” - மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்ப்பு
x
தினத்தந்தி 1 Dec 2019 11:15 PM GMT (Updated: 1 Dec 2019 9:44 PM GMT)

அயோத்தி தீர்ப்பின் மீது முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மறு ஆய்வுமனு தாக்கல் செய்யும் முடிவுக்கு மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்ப்பு தெரிவித்தார்.

லக்னோ,

அயோத்தி தீர்ப்பின் மீது முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மறு ஆய்வுமனு தாக்கல் செய்யும் முடிவுக்கு மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது சமூகத்தில் பிளவையும், மோதலையும் ஏற்படுத்தும் முயற்சி என அவர் சாடினார்.

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமஜென்மபூமி, பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்பட்டு வந்த 2.77 ஏக்கர் நிலத்தின் மீதான உரிமை யாருக்கு என்பது தொடர்பான மேல்முறையீடு வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் 9 ஆண்டு காலம் நிலுவையில் இருந்து வந்தன.

இந்த மேல்முறையீட்டு வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (தற்போது ஓய்வு பெற்று விட்டார்) தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து, சர்ச்சைக்குரிய இடம் என கூறப்பட்டு வந்த 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்காக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பின்மீது மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்போவது இல்லை என்று சன்னி வக்பு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இருப்பினும், அயோத்தி தீர்ப்பின்மீது, சுப்ரீம் கோர்ட்டில் அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வரும் 9-ந் தேதி மறுஆய்வு மனு தாக்கல் செய்வதாக அறிவித்துள்ளது.

இதையொட்டி அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் மவுலானா வாலி ரகுமானி செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், “ நீதித்துறையின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவேதான் நாங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்கிறோம். இருப்பினும், இந்த நம்பிக்கை, அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பின்னர் பலவீனம் அடைந்துள்ளது” என கூறினார்.

மேலும், “ 99 சதவீத முஸ்லிம்கள் மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு ஆதரவாக உள்ளனர். அதே நேரத்தில் எங்கள் மறு ஆய்வு தள்ளுபடியாகி விடும் என கருதுகிறோம். அதற்காக நாங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மாட்டோம் என்று அர்த்தம் ஆகி விடாது. இது எங்கள் சட்டப்பூர்வ உரிமை. தீர்ப்பில் பல முரண்பாடுகள் உள்ளன” என்றும் கூறினார்.

இதேபோல் ஜாமியத் உலமா இந்த் அமைப்பும் மறுஆய்வு மனு தாக்கல் செய்வதாக கூறி உள்ளது.

அயோத்தி தீர்ப்பின் மீது அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், ஜாமியத் உலமா இந்த் அமைப்பும் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுதாக்கல் செய்யும் முடிவுக்கு மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதையொட்டி அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் கருத்து உரிமை இருக்கிறது. கோர்ட்டுகளை நாடுவதற்கு சுதந்திரம் உள்ளது. இருந்தாலும், அயோத்தி தீர்ப்பை பொறுத்தமட்டில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் வரவேற்றுள்ளனர். மதித்து உள்ளனர். ஆனால் இந்த தீர்ப்புக்கு பின்னர் ஒற்றுமை பலப்படுத்தப்பட்டுள்ளது என்ற உண்மையை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை என்றால் அது வருத்தம் அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறும்போது, “ அயோத்தி பிரச்சினை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பால் முடிவுக்கு வந்து விட்டது. முஸ்லிம் மக்களின் முக்கிய பிரச்சினை பாபர் மசூதி அல்ல; கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் சமத்துவம் பெறுவதுதான் முக்கியம்” என்று குறிப்பிட்டார்.

“அயோத்தி தீர்ப்பின் மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்வது என்ற அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும், ஜாமியத் உலமா இந்த் அமைப்பும் முடிவு செய்திருப்பது, சமூகத்தில் பிளவு மற்றும் மோதல் சூழ்நிலையை உருவாக்குவதற்கான முயற்சிதான். இதை சமூகத்தின் எந்த பிரிவினரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனிமைப்படுத்தப்பட்ட இந்த எதிர்ப்பு குரல், ஒட்டுமொத்த சமூகத்தின் குரல் அல்ல” என்று முக்தர் அப்பாஸ் நக்வி கூறினார்.

இந்த பிரச்சினையை இந்து மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினையாக பார்க்கவும் கூடாது என அவர் வலியுறுத்தினார்.


Next Story