குடியுரிமை சட்டத்தை உறுதியாக அமல்படுத்தமாட்டோம் - மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி


குடியுரிமை சட்டத்தை உறுதியாக அமல்படுத்தமாட்டோம் - மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி
x
தினத்தந்தி 16 Dec 2019 11:00 PM GMT (Updated: 16 Dec 2019 9:51 PM GMT)

கொல்கத்தாவில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

கொல்கத்தா,

குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. அப்போது அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தமாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தார்.

மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கடும் போராட்டம் நடந்துவருகிறது. இந்த போராட்டங்களில் பல இடங்களில் வன்முறை சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, “தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பையும், குடியுரிமை சட்டத்தையும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

மேற்குவங்காள மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடந்துவருகிறது. இந்நிலையில் மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்தபடி நேற்று அவரது தலைமையில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு அம்பேத்கர் சிலையில் இருந்து தொடங்கி ஜோரசாங்கோ தாகுர்பரியில் பேரணி முடிவடைந்தது.

7 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். பேரணியை தொடங்கிவைத்த மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக கோஷம் போட்டார்.

அப்போது மம்தா பானர்ஜி, “மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு ஆகியவற்றை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இந்த மாநிலத் தில் இருந்து ஒருவர்கூட வெளியேற்றப்படமாட்டார். அனைத்து மதம், சாதி, சமயங்களை சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து வாழ்வதில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்” என்று உறுதிமொழியை வாசித்தார்.

நாம் அனைவரும் இந்த தேசத்தின் குடிமக்கள். அதை நம்மிடம் இருந்து யாரும் தட்டிப்பறிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே போராட்டக்காரர்கள் பசுல்யாசுதாஹதா ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் டாம்லுக்-ஹால்டியா இடையே ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல மேலும் சில இடங்களிலும் ரெயில் போக்குவரத்து மறியல் காரணமாக தடைபட்டது. சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

பிர்பும் மாவட்டம் சத்ரா பகுதியில் போராட்டக்காரர்கள் தேசிய நெடுஞ்சாலையில் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையில் டயர் களை போட்டு எரித்தனர்.

Next Story