தேசிய மக்கள் தொகை பதிவு தகவல்களை சேகரிப்பதற்கான படிவம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை


தேசிய மக்கள் தொகை பதிவு தகவல்களை சேகரிப்பதற்கான படிவம்  இன்னும் இறுதி செய்யப்படவில்லை
x
தினத்தந்தி 26 Dec 2019 8:09 AM GMT (Updated: 26 Dec 2019 8:09 AM GMT)

தேசிய மக்கள் தொகை பதிவு தகவல்களை சேகரிப்பதற்கான படிவம் அல்லது அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

தேசிய மக்கள் தொகை பதிவுக்கும் (என்.பி.ஆர்),  தேசிய குடியுரிமை பதிவுக்கும் (என்.ஆர்.சி) எந்த தொடர்பும் இல்லை என சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை  மந்திரி அமித் ஷா  தெளிவுப்படுத்தி இருந்தார். தந்தை மற்றும் தாயின் பிறந்த இடம் குறித்த விவரங்களைத் தேடும் தேசிய மக்கள் தொகை பதிவு (என்.பி.ஆர்) 2020 படிவம் சமூக ஊடகங்களில்  பரவத்தொடங்கியதைத் தொடர்ந்து குழப்பம் நிலவியது. 

உள்துறை அமைச்சகத்தின் (எம்.எச்.ஏ) செய்தித் தொடர்பாளர், என்.பி.ஆருக்கான தகவல்களை சேகரிப்பதற்கான படிவம் அல்லது அட்டவணை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறினார்.

அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர், முதல் கட்டத்தின் போது  சோதனை  படிவம் பயன்படுத்தப்படுவதாகவும், பதிலளித்தவர்களிடமிருந்து கருத்துகளை எடுத்துக் கொண்ட பின்னர் இறுதி அட்டவணை தயாரிக்கப்படுவதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, தந்தை மற்றும் தாயின் பிறந்த இடம் போன்ற விவரங்கள் உள்ள  இந்த படிவம் செப்டம்பர் மாதத்தில் சோதனை கட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு இறுதிப் பயிற்சியை மேற்கொள்வதற்கு முன், நாங்கள் கணக்கெடுப்பவர்களுக்கு  பயிற்சியளிக்க வேண்டும். மேலும் கணக்கெடுக்கப்பட்டவர்களிடமிருந்து கருத்துகளையும் பெற வேண்டும். இந்த அடிப்படையில் இறுதி தேசிய மக்கள்தொகை பதிவு  படிவத்தின் உள்ளடக்கங்களை நாங்கள் தீர்மானிப்போம் என கூறினார்.

2010 ஆம் ஆண்டில் முதன்முதலில் நடத்தப்பட்டதேசிய மக்கள்தொகை பதிவு பின்னர் 2015ல் புதுப்பிக்கப்பட்டது. அதில் பின்வரும் 15 அளவுருக்கள் பற்றிய விவரங்களை சேகரித்தது. நபரின் பெயர், வீட்டுத் தலைவருடனான உறவு, தந்தையின் பெயர், தாயின் பெயர், மனைவியின் பெயர் (திருமணமானால்), பாலினம், பிறந்த தேதி, திருமண நிலை, பிறந்த இடம், தேசியம் (அறிவிக்கப்பட்டபடி), வழக்கமான வசிப்பிடத்தின் தற்போதைய முகவரி, தற்போதைய முகவரியில் தங்கியிருக்கும் காலம், நிரந்தர குடியிருப்பு முகவரி, தொழில் / செயல்பாடு மற்றும் கல்வித் தகுதி ஆகியவை இடம் பெற்று இருக்கும்.

Next Story