பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது - அமித்ஷா திட்டவட்டம்


பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது - அமித்ஷா திட்டவட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2020 11:15 PM GMT (Updated: 12 Jan 2020 10:21 PM GMT)

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்த சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது என்று அமித்ஷா கூறினார்.

ஜபல்பூர்,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் சத்தமாக சொல்லிக்கொள்கிறேன். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள். குடியுரிமை திருத்த சட்டத்தை உங்களால் முடிந்த அளவுக்கு எதிர்த்துக் கொள்ளுங்கள்.

ஆனால், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்காமல் மத்திய அரசு ஓயாது. யாரும் எங்களை தடுக்க முடியாது.

உங்களுக்கும், எனக்கும் இந்தியா மீது எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை இந்த மக்களுக்கும் இருக்கிறது. அவர்கள் இந்தியாவின் பிள்ளைகள். அவர்களை நாடு தழுவிக்கொள்ளும்.

நான் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு சவால் விடுகிறேன். யாருடைய குடியுரிமையாவது பறிக்கப்படும் என்று குடியுரிமை சட்டத்தில் எந்த ஒரு சட்டப்பிரிவாவது இருக்கிறதா என்று காட்டுங்கள் பார்க்கலாம். இது, குடியுரிமை அளிக்கும் மசோதா. குடியுரிமையை பறிக்கும் மசோதா அல்ல.

கடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலின்போது, பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், அதே செயலை செய்யும் பா.ஜனதாவை இப்போது எதிர்க்கிறது. ராஜஸ்தான் முதல்வர், தனது தேர்தல் அறிக்கையை சரி பார்க்கட்டும்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சில மாணவர்கள் தேசவிரோத கோஷங்களை எழுப்பினார்கள். அவர்களை பாதுகாக்குமாறு ராகுல் காந்தியும், கெஜ்ரிவாலும் கூறுகிறார்கள். அவர்கள் என்ன உங்கள் ஒன்றுவிட்ட சகோதரர்களா? அவர்களை ஜெயிலில்தான் தள்ள வேண்டும்.

அயோத்தியில், விண்ணை முட்டும் அளவுக்கு ராமர் கோவில் கட்டும் பணி, 4 மாதங்களில் தொடங்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.


Next Story