ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் - தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனு


ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் - தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனு
x
தினத்தந்தி 13 Jan 2020 11:15 PM GMT (Updated: 13 Jan 2020 8:55 PM GMT)

ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கினை, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷனிடம் தி.மு.க. மனு அளித்துள்ளது.

புதுடெல்லி,

தி.மு.க. முதன்மை செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தேர்தல் கமிஷனர் அசோக் லவாசா ஆகியோரை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 2017-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடக்கும் நேரத்தில் 8-4-2017 அன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்திலும், மற்றும் பல்வேறு இடங்களிலும், வருமானவரித்துறை நடத்திய சோதனையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி பணம் கொடுத்தது கண்டறியப்பட்டது. வருமானவரித் துறையினரின் அறிக்கையை தொடர்ந்து 12-4-2017-ல் நடைபெற இருந்த தேர்தலை, 9-4-2017 தேதியிட்ட உத்தரவு மூலம் இந்திய தேர்தல் கமிஷன் ரத்துசெய்தது.

அதைத்தொடர்ந்து, தமிழக தேர்தல் அதிகாரி கிரிமினல் வழக்கு ஒன்றை யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் காவல்துறையில் பதிவு செய்தார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று தி.மு.க. சார்பில் கவர்னரை சந்தித்து மனு அளிக்கப்பட்டதுடன், ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த வழக்கை தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சியுடன் கூட்டு சேர்ந்து ஐகோர்ட்டு மூலம் வழக்கை ரத்து செய்துவிட்டனர்.

எனவே ரத்து செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதுடன், இந்த விவகாரத்தில் சரிவர செயல்படாத அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story