டெங்கு, சிக்குன் குனியா நோய்களை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்


டெங்கு, சிக்குன் குனியா நோய்களை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 27 Jan 2020 9:39 PM GMT (Updated: 27 Jan 2020 9:39 PM GMT)

டெங்கு, சிக்குன் குனியா நோய்களை கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி,

டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்களால் ஆண்டுக்கு 100 பேர் உயிர் இழப்பதாகவும், எனவே இந்த நோய்களை முழுமையாக கட்டுப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், எஸ்.ரவீந்திர பட் ஆகி யோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜராகி, இந்த நோய்களால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், எனவே இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வாதாடினார்.

அதற்கு நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பில் அரசுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை மாநில அரசு பின்பற்றி அந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தினால் போதும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.


Next Story